என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Sunday, May 13, 2012

அம்மா என்றழைக்காத உயிரில்லையே!



பிறக்கும் முன் உறைவிடம் கொடுத்து
நான் வாழ உயிர் கொடுத்து
உலகில் என்னை அறிமுகம் செய்த
பெண் பிரம்மா நீ!!
மெதுவாய் எனை தொட்டு பார்த்து
மனமகிழ்ந்தாய் நீ !
வலிக்காமல் கிள்ளிப் பார்த்து
உயிர்மகிழ்ந்தாய் நீ!!

உலகில்
நான் முதன் முதலாய்
விழித்தது அழுதது
பேசியது சிரித்தது
எழுந்தது நடந்தது
முறைத்தது வெட்கப்பட்டது என
என்னுடைய ஒவ்வொரு அசைவையும்
பார்வையால் படம்பிடித்த முதல்
ஒளிப்பதிவாளர் நீ!

உன் தோள்மீதும் மடிமீதும்
சாய்த்தென்னை உறங்கவைக்க
என் பேர் சொல்லி
நீ பாடிய தாலாட்டிடம்
இணை நிற்காது எவ்விசையும்!

விரல் பிடித்து நடைப்பழகினாய்
இசை பிடித்து மொழிப்பழகினாய்
எனக்கு நீ !

உன்னைக் கொண்டு தான்
அன்பெனும் சொல்லை
அகராதியில் படைத்தான் இறைவன்!

நான் முதலாய் பள்ளிக்கு
சென்ற தினத்தில்
பள்ளியறை வரை
நான் அழுத நேரத்தில்
ஆறுதலாய் அன்பை அள்ளி வீசிவிட்டு
பள்ளிவிட்டு வெளியேறி
உன் கண்ணீர் அணை
திறந்துவிட்ட நிமிடங்கள்
உன் அன்பின் அடையாளங்கள்;

சிறுவயதில்
என் விழி அதிகமாய்
தேடுவது உன்னை மட்டுமே!

என் சிறு வலிக்கூட
உன் மனதிற்கு பெரும்வேதனை
கொடுத்திருந்தது;

என் விருப்பத்தை
கேட்காமல் நிறைவேற்றும்
கடவுள் நீ !

உன்னில் பிறந்ததன்றி
வேற்றொரு வரம் பெரியதில்லை!

இதற்கு மேலும்
உன்னை எழுத
தமிழில் வார்த்தை குறைவுகளே!!!

இதுவரை என் கவிகளில்
இதில் கிடைத்தது தான்
என் மனதின் நிறைவுகளே!!!

என்றும் உன் பாதத்தில்
இருக்கும் சொர்க்கத்தை முத்தமிடும்
உன் ஆருயிர் மகன்

Saturday, May 5, 2012

வழக்கு எண் : 18/9 - மற்றுமொரு ஆழமான பதிவு நம் மனதுகளில்.

நிறைய திரைப்படங்களின் கதைகள் பெரும்பாலும் உண்மை சம்பவங்களில் இருந்து தான் ஈர்க்கப்பட்டு திரைப்படமாய் எடுக்கபடுகிறது. 


ஒரு சம்பவம் அல்லது ஏதாவது ஒரு நிகழ்வு படைப்பாளியின் மனதில் ஒரு தீப்பொறியாய் விழுந்து ஒரு திரைக்கதை உருவாக காரணமாகவும் அமைகிறது. பெரும்பாலும் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் என்றாலும் பெரும்பாலான படங்களில் யதார்த்தம் குறைவாகவே காணப்படுகிறது. 


சினிமா ஒரு வியாபார பொருள் என்பதால் உண்மை கதைகளில் வியாபார நுணுக்கங்கள் சேர்ந்து மொத்தத்தையும் சிதைத்துவிடுகிறது.அப்படியும் சில படைப்பாளிகள் தான் கொண்ட கதையை கொஞ்சம் கூட வியாபாரத்திற்காக மாற்றாமல் அப்படியே படைத்து வெற்றி பெறுகிறவர்கள் நிகழ்காலத்தில் உருவாகி உள்ளனர்.


அப்படி,தமிழ் சினிமாவின் மகுடத்தில் உள்ள வைரம் தான்...பாலாஜி சக்திவேல்(காதல்,கல்லூரி படங்களின் இயக்குனர் ) 


இப்போது அவரின் படைப்பில் புதிதாய் உதிர்ந்திருப்பது..வழக்கு எண் : 18/9 


இன்றைய சில இளைஞர்களின் காதலில் உண்மையான முகங்களை கொண்டு கதை பின்னிருக்கிறார் பாலாஜி.அவர் சொல்லிய விதத்தில் பார்ப்பவர்கள் 
கூட தமது வாழ்வில் நடைபெற்ற இது போன்ற போன்ற சம்பவங்களை நினைவு கூற முடியும்.அவ்வளவு யதார்த்தம். 


கொஞ்சம் கதாப்பாத்திரங்களை கொண்டு கதை சொல்லி வெற்றியை ஏற்கனவே ருசித்த தனது கொள்கை இந்த படத்திலும் பின் தொடர்ந்து 
வெற்றியும் பெற்று இருக்கிரார். 


வழக்கு எண் : 18/9 புதுமுகங்களோடு ஒரு யதார்த்த பயணம். 


திரைக்கதை வெகு நேரம் பிளாஷ்பேக் கில்  நகர்கிறது.அதில் ரெண்டு காதல்கள்,ஒரு குற்றம் மற்றும் விசாரனை...இவ்ளோ தான் படம்.


பொய்,குற்றங்கள்,காமம் என நகர்ந்தாலும் ஆபாசம் இல்லாமல் எடுத்ததில் பாலாஜிக்கு ஒற்று போக்கே...! 


ஸ்ரீ..ரோட்டோர கடையில் வேலை பார்க்கும் ஓர் அநாதை இளைஞன்,
ஜோதி(அவனுக்கு எதிரே உள்ள அப்பார்ட்மென்ஸ் இல் வீடு வேலை பார்க்கும் பெண்) இருவருக்கும் காதல்....


அதே அப்பார்ட்மென்ஸ் இல் மற்றும் ஒரு காதல் ஜோடி தினேஷ் மற்றும் ஆர்த்தி.வேலைக்கு செல்லும் பெற்றோர்களால் கவனிக்க படாத ஆர்த்தி..


பிட்டு படங்களில் மோகத்தில் இருக்கும் தினேஷின் வலையில் விழுகிறாள்
(அவனது வரலாறு தெரியாமல்) 


அதிக பிரச்சனைகளால் ஒரு குற்றம் நடக்கிறது பின் அது விசாரணைக்கு குமாரவேலிடம் வருகிறது. 


அதன் பின் விசாரணையும் சட்டமும் என்ன செய்தது என்பது தான் மீதி வேக திரைக்கதை.


காதல்-லுக்கு பின் நடிகர்களின் அபாராமான நடிப்பை கொண்டு கதை சொல்லி  இருக்கும் படம் இது. 


ஸ்ரீ - பிளாட்பாரம் இளைஞனை நமது கண் முன் நிறுத்துகிறார்.


ஊர்மிளா - திரையில் ஒரு சிறு கவிதை..பாலாஜியின் மற்றுமொரு நடிப்பு கண்டுபிடிப்பு.சந்தியா போல இல்லாம பெரிய ரௌண்டு வரது இவுங்க கைல தான் இருக்கு. 


மிதுனின் நடிப்பு மிக நன்றாக கதைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. குமாரவேல் - திரைகதையின் பலமே இவர் தான். 


விஜய் மில்டனின் காமிரா மிகவும் ஒளிர்கிறது...அதுவும் தினேஷின் நிஜமுகத்தை கண்டுபிடிக்கும் ஆர்த்தி அவனது மெமரி கார்டை எடுக்கும் சீன் 
மிக நேர்த்தியாக படம் பிடிக்க பட்டுள்ளது.


பிரசன்னாவின் பின்னணி இசை பாலாஜியின் திரைகதை உழைப்பிற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. 


ஒட்டுமொத்த குழுவின் உழைப்பை வீணடிக்காமல் இருக்கிறது கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு. 


இப்படி ஒரு படத்தை பாலாஜி சக்திவேல் மட்டும் தான் கொடுக்க முடியும்...


வழக்கு எண் : 18/9  - மற்றுமொரு ஆழமான பதிவு நம் மனதுகளில்.