என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, November 4, 2010

தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!!!






புத்தாடை அணிந்து
புது உற்சாகம் பிறந்து
இனிமையாய் பிறக்கட்டும் இத்தீபாவளி!

தாய் தந்தை ஆசிர்வாதத்தோடு
உடன் பிறந்தோரின் அன்போடு
தோழர்களின் உள்ளத்து வாழ்த்தோடு
செம்மையாய் சிறக்கட்டும் இத்தீபாவளி!

பலகார உணவின் சுவையோடு
பட்டாசு வெடியின் சத்தத்தோடு
வீட்டை சுற்றி அகல்விளக்கோடு
மேன்மையாய் இருக்கட்டும் இத்தீபாவளி!

அநியாய அசுரன் அழிந்த தினத்தில்
நாமும் நமக்குள் வாழும்
அசுர குணங்களை அழிக்கலாமே!

வெடிச்சத்தம் கேட்க தீபாவளி இருக்க
அமைதி ஏன் முகவரி இழக்கிறது
மற்ற நாட்களில்?

உலகை பற்றி
அறிந்து அறியாமல் இருக்கிறோமா?
இல்லை
அறியாமல் இருப்பதை அறிந்துவிட்டோமா?

தீண்டாமையை ஒற்றுமை எனும் தீ
கொளுத்தப்போவது எப்போது?

வன்முறையை மனிதநேயம் வெல்ல
எவ்விடத்தில் அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது?

தீவிரவாதத்தை அன்பு
மிஞ்ச முடியாமற் போனதற் காரணம்?

அத்துணைக்கும் பதில் நம்மிடத்தே உண்டு!

நொடிகளும் நொடிக்கொருமுறை
கடந்து விடுவதால்
இறந்த காலம் இறந்து போகட்டும்!

இன்றைய புத்தாடையுடன்
புதுமனிதனாய் நாம் பிறந்திட
இனி வரும் காலங்களில்
நற்சிந்தனைகள் நம் மனதில் வளரட்டும்;

முயற்சியை துணையாய் கொள்வோம்
அன்பினால் உலகை இணைப்போம்
விதியின் சதியை மதியால் வெல்வோம்
மனிதனாய் சிலநாள் உலகினில் வாழ்வோம்;

எத்திசையில் வாழும் அனைவரும்
அவரின் எண்ணத்துடன் இன்பமாய் வாழ்ந்திட
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கும்
இந்த கவித்தோழனின்
தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

- கவித்தோழன்